இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் லாஹுல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள தாபோ மண்டலத்தின் புத்த மடாதிபதியாக 4 வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி ரன்கிரிக் கிராமத்தில் ராப்டன் பிறந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள புத்த மடாதிபதியாக இருந்த தாக்லங் செதுல் ரின்போச்சே 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலமானார்.
மடாதிபதி இல்லை
அவருக்குப்பின் 7 ஆண்டுகளாக புதிய மாடதிபதி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது நவாங் டாஷி ராப்டன் என்ற சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திபெத்திய புத்த மதப்பள்ளிகளில் சாக்யா, காக்யு, கெலுக், யிங்மா ஆகியவை முக்கியமானது. இதில் யிங்மா பள்ளியின் மடாதிபதியாக தாக்லங் செதுல் ரின்போச்சே இருந்தார்.
4 வயது சிறுவன் தேர்வு
அவரின் மறைவுக்குப்பின் மடாதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திபெத்திய புத்த மடாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவாங் டாஷி ராப்டனுக்கு அங்கு நர்சரி பள்ளிக் கல்வியும் அதைத் தொடர்ந்து ஷிம்லாவில் உள்ள பாதாகாட்டியில் புத்த மதம் சார்ந்த கல்வியும் கற்பிக்கப்படும்.

புதிய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாங் டாஷி ராப்டனை வரவேற்க ஷிம்லா நகரில் நேற்று ஏராளமான திபெத்திய புத்த குருமார்களும், துறவிகளும், கூடியிருந்தார்கள்.
ராப்டனை அவரின் பிறந்த வீட்டிலிருந்து புத்தாடைகள் அணிவித்து, அலங்கார ஊர்தியில் அழைத்து வந்தனர்.
புத்த மதக்கல்வி
தாபோ நகரில் உள்ள செர்காங் அரசுப் பள்ளியில் நர்சரி வகுப்பில் ராப்டன் படித்து வந்தார். இனிமேல் ராப்டன், சங்கம் என்ற புத்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பார். அவருக்கு முறைப்படி புத்தமதக் கல்வி கற்பிக்கப்படும்.

திபெத்திய புத்த மத கொள்கைகள், தத்துவங்கள், புத்தரின் போதனைகள் போன்றவை ராப்டனுக்குக் கற்பிக்கப்படும்.
பெற்றோர் மகிழ்ச்சி
ராப்டன் புதிய புத்த மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், அவர் குறித்த விவரங்களை அவரின் குடும்பத்தாரிடம் புத்த மத குருமார்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டவுடன், ராப்டனின் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ராப்டனின் தாத்தா, “புத்த மதத்துறவிகளுக்கு புதிய குரு முக்கியமானது. என்னுடைய பேரன் புதிய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணம்.
குடும்பத்திற்கு பெருமை
புத்த துறவிகள் எங்கள் கிராமத்துக்கு வந்து, எங்கள் வீட்டுப் பிள்ளையைத் தேர்ந்தெடுத்தனர், புதிய மடாதிபதியாக தேர்ந்தெடுக்க அனுமதி தாருங்கள் என்று எங்களிடம் கேட்டனர்.
உடனடியாக நாங்கள் சம்மதித்துவிட்டோம். இப்போது எங்களுக்கு இது முக்கியமான தருணம்” எனத் தெரிவித்தார்.
-எம். மோகன்