கடனில் மூழ்கிக் கிடந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக டாடா குழுமம் சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு வாங்கிய நாளில் இருந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது டாடா குழுமம் தனது 3 விமான சேவை நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக எப்போது மாறும் என்பதுதான்.
2024க்குள் இணைப்பு
டாடா குழுமத்திற்கு இந்த இணைப்பு முக்கியமான திட்டமாக இருக்கும் நிலையில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் சேவைகள், சொத்துகள் என அனைத்தையும் மார்ச் 2024க்குள் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஸ்தாரா என்பது இந்தியாவில் ப்ரீமியம் விமான சேவைக்காக டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி ஏர்லைன்ஸ் நிறுவனம்.
ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா
தற்போது ஏர் இந்தியாவை மொத்தமாகக் கைப்பற்றிய டாடா குழுமம் விஸ்தாராவை ஏர் இந்தியா உடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியாவில் 25 சதவிகித பங்குகளைப் பெற உள்ளது. இதேபோல் இணைப்பிற்கு பின்பு 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

விஸ்தாரா கூட்டணி நிறுவனத்தில் டாடா குழுமம் 51 சதவிகித பங்குகளையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவிகித பங்குகளையும் வைத்துள்ளன.
கூடுதல் விமான சேவை
இந்த இணைப்பு மூலம் அதிக விமானங்கள், அதிக வழித்தடத்தில் இயக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். மார்ச் 2024 காலகட்டத்திற்குள் ஏர் இந்தியா உடன் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய பிராண்டுகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்த விமான போக்குவரத்துச் சந்தையில் ஏர் ஏசியா இந்தியாவின் பங்கு 5.7 சதவிகிதம். ஏர் ஏசியா இந்தியா விற்பனை குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நவம்பர் மாதம்தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பங்கு விற்பனை முடிந்துள்ளது.
நிர்வாக செலவுகள் குறையும்
டாடா குழுமம் தனது விமான சேவை நிறுவனங்கள், வர்த்தகம், கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா கீழ் கொண்டு வரும் மாபெரும் திட்டம் மூலம் டாடா குழுமத்திற்கு நிர்வாகச் செலவுகள் பெரிய அளவில் குறையும்.
விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 நிறுவனங்களை இணைத்து நாட்டின் 2வது பெரிய விமான சேவை நிறுவனமாக உயர்த்தப்படும்.
பயணக் கட்டணம் குறைப்பு
இதன் மூலம் ஏர் இந்தியா மலிவு விலை விமான சேவை முதல் வெளிநாட்டு விமான சேவை வரையில் ஏர் இந்தியா பிராண்ட் பெயரில் கொடுக்க முடியும்.

218 விமானங்கள் இந்த இணைப்பிற்குப் பின்பு விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பிராண்டுகளின் பெயர்கள் நீக்கப்படும்.
சேவையில் 218 விமானங்கள்
ஏர் இந்தியாவில் 113 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸில் 24 விமானங்களும், விஸ்தாராவில் 53 விமானங்களும், ஏர் ஏசியா இந்தியாவில் 28 விமானங்களையும் கொண்டுள்ளது.
இதன் மூலம் மொத்த 218 விமானங்களுடன் இந்தியா முழுவதும் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சேவை அளிக்க உள்ளது.
-எம். மோகன்